திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் டாக்டர் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி 80 பவுன் நகை, 68 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி பிரசன்னா என்ற சக்கரவர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் டாக்டர் தர்ப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், சக்ரவர்த்தி வயது முதிர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், விவகாரத்து ஆனவர்களை குறிவைத்து மோசடி செய்து வருகிறார். இதுவரை 17க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதால், அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என வாதம் முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, திருமண இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர். இணையதளங்களை கட்டுப்படுத்த எந்த ஒரு சட்டமோ, விதிகளோ உருவாக்கப்படவில்லை. பதிவு செய்யும் ஆணோ அல்லது பெண்ணோ பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்திருந்தால், மோசடிகள் தடுக்கப்படும் என்று கூறினார்.
இதனை அடுத்து சக்கரவர்த்தியின் முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.







