மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை – அமைச்சர்

திருக்கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது மொட்டை போடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக…

திருக்கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது மொட்டை போடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோவி செழியன் மற்றும் நந்தகுமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

அதில் பேசிய உறுப்பினர் நந்தகுமார், மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தின் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் உண்மையா? ஆம் எனில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தால் பக்தர்களின் உள்ளம் நெகிழ்ந்திருப்பதாக பேசினார். பொதுவாக பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கு ஐநூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாகவும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் உயிரையே காணிக்கையாக செலுத்துவது போல தாங்கள் வளர்த்த முடியை காணிக்கையாக செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

மேலும், திருக்கோயில்களில் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பணியில் ஈடுபட்டுள்ள 1,749 பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.