காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் இறந்த பேருந்து நடத்துநருக்கு ரூ.42 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக மாவட்ட நீதிபதி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (57). இவர் சென்னை போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2022 அக்டோபர் 23-ம் தேதி இவர் தனது தாயாரின் நினைவாக அனாதை இல்லத்துக்கு சென்று உணவு வழங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத் அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மணல் கற்கள் ஏற்றி வந்த லாரி மோதியதில் உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விபத்தில் இறந்த மாரிமுத்துவின் மனைவி ரோஸ் மேரி தனக்கு ரூ.1.50 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.லிங்கேசுவரன் ஆஜரானார்.
மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் சார்பில் ரூ.42 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்குவது என சமரசம் செய்யப்பட்டது. இந்த இழப்பீட்டுத் தொகையினை மாரிமுத்துவின் குடும்பத்தினரிடம் மாவட்ட நீதிபதி செம்மல் வழங்கினார். இந்த வழக்கில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்து விபத்துக்குள்ளான தசரதனுக்கும் காயம் ஏற்பட்டதால் அவருக்கு ரூ.2.25 லட்சமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.