பணி மேற்கொள்ளும் போது உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் (28.06.2022) காலை முதல் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ஒப்பந்தத் தொழிலாளி நெல்சன் என்கிற கட்டாரி வயது சுமார் 26, இயந்திர துளையில் ஏதேனும் ஏதேனும் கல்/ துணி அடைக்கப்பட்டிருக்கிறதா என்று சாலையில் நின்று கவனித்த போது, இயந்திர துளையில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற ஒப்பந்த தொழிலாளி ரவியும் அப்போது இயந்திர துளையில் விழுந்துள்ளார்.
தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் உயிருடன் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஒப்பந்தத் தொழிலாளி நெல்சன் என்கிற கட்டாரி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மேலும், மற்றொரு தொழிலாளி ரவிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உயிரிழந்த நெல்சன் என்கிற கட்டாரி குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 15 லட்சம் வழங்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.








