குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மார்ச் 3 ஆம் தேதி தொடங்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்த நிலையில், இத்திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இந்த நிலையில் உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
முன்னதாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவுக்கு உதவ துணைக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. நிதித்துறையின் கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநரே உட்பட 4 பேர் அடங்கிய துணைக்குழுவையும் அமைத்தது. இந்த பொருளாதார நிபுணர் குழுவுடன் 2 நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







