தமிழ்நாட்டில் உள்ள ஏரி, கால்வாய்கள், குளங்களைத் தூர்வார RRR எனும் புதிய
திட்டத்தை தயாரித்து வருவதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்
தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சியாக
விளையாடும் வகையில் உணர்வுப் பூங்காவை நேற்று முன்தினம் முதலமைச்சர் திறந்துவைத்தார். பெருமூளை வாத குறைபாடு உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் கூடை ஊஞ்சல், மாற்றுத் திறனாளி குழந்தைகள் சர்க்கர நாற்காலியுடன் ஊஞ்சல் ஆடும் வசதி கொண்ட சர்க்கர நாற்காலி ஊஞ்சல், ஒவ்வொரு குழாயும் ஒவ்வொரு ஒலியை எழுப்பும் வகையிலும் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் விளையாடி மகிழும் வசதி, பார்வை குறைபாடு மற்றும் சாதாரண குழந்தைகள் விளையாட குழாய் தொலைபேசி வசதி உள்ளிட்டபல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பூங்காவை அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் மா.சுப்பிரமணியன் இணைந்து பார்வையிட்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய துரைமுருகன், சாதாரண இடத்தை அற்புதமான பூங்காவாக மாற்றியிருப்பதாகவும், இதனை பார்த்து வியந்து போயிருப்பதாகவும் கூறினார். ஓராண்டு ஆட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதாக எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்த்து தான் பேசுவார்கள் ? புகழ்ந்தா பேசுவார்கள் என்றார்.
மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த குடிமராமத்து திட்டம் பல்வேறு சிக்கல்களை கொண்டுள்ளது. எனவே, ஏரி, கால்வாய்களைத் தூர்வார RRR எனும்
புதிய திட்டம் தயாராகி வருகிறது. ஐந்து ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்துள்ள நிலையில் நடப்பாண்டில் 100 முதல் 120 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாகக் கூறினார். கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ சோதனை தொடர்பான கேள்விக்கு தனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார்.
முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், கோட்டூர் பகுதியில் உணர்வுப் பூங்காவுக்கு அருகில்
கட்டப்பட்டிருந்த புதிய அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்தார்