சட்டமன்ற அதிமுக கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஓபிஎஸ் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து, அதிமுக சட்டமன்ற கட்சியின் நிர்வாகிகளை மாற்றக்கூடிய வகையில் மனுக்கள் வந்தால் அதனை நிராகரிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் எழுதினார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 17ம் தேதி சென்னை கிரவுண்ட் ப்ளாசா ஹோட்டலில் நடைபெற்றது. அதில், சட்டமன்ற கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சட்டமன்ற கட்சி துணைத் தலைவர் என்றால் அது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பொருள் கொள்வதுதான். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவி அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசனுக்கே வழங்கப்பட்டது. அதே வகையில் தற்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் ஆர்.பி.உதயகுமாருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு அதிமுகவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்ற கூற்றையும் உடைக்க நினைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.







