ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் தலைமை ஆசிரியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளயில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளியில் உள்ள பழமையான வகுப்பறை கட்டிடத்தில் வழக்கம்போல தலைமை ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளியின் மேற்கூரை இடிந்து, தலைமை ஆசிரியரின் மேஜை மற்றும் இருக்கை மீது விழுந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மற்றும் பள்ளிக்குழந்தைகள் அலறியபடி வகுப்பறை கட்டிடத்தை விட்டு வெளியே ஓடினர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாணவர்களை அந்த கட்டிடத்தில் இருந்து பத்திரமாக அப்புறப்படுத்தினர். தற்போது அந்த வகுப்பில் படித்த மாணவர்களை அருகில் உள்ள கோவிலில் அமர வைத்து ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார். எப்போதுமே அந்த மேஜை நாற்காலியில் தலைமை ஆசிரியர் அமர்ந்து இருப்பார் இன்றும், இடியும் சில வினாடிக்கு முன்பாகதான் அதில் இருந்து எழுந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் இடிந்த பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், புனரமைப்பு செய்வதாக கூறி பெயரளவில் கண்துடைப்பு வேலைகள் செய்தாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே ஏழை எளிய மாணவ மாணவிகள் படிக்கும் அரசு பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை அடியோடு அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







