பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் அனுமதியை பெற்று சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 4வது நாளான இன்று சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடியது. வினாக்கள் – விடைகள் நேரத்தில் முதல் கேள்வியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கேள்வியாக இருக்கிறது. அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதன்முறையாக பதிலளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருப்பூரில் நவீன வசதிகளிடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வாய்ப்புள்ளதா என திருப்பூர் தெற்கு உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 8 ஏக்கர் பரப்பளவில் 18 கோடி ரூபாய் மதிப்பில், கால்பந்து, உடற்பயிற்சி கூடம், தடகள ஓடுதள பாதை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய மைதானம் அமைக்கும் பணி 60 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாகவும், ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த மைதானத்தை தானே நேரில் வந்து திறந்து வைப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு உலகமே வியக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி முடித்திருப்பதாகவும், பாரம்பரிய விளையாட்டுகள் அடங்கிய கபடி மற்றும் சிலம்பம் போட்டிகளை உள்ளடக்கிய முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் அவர் பதிலளித்தார்.
மேலும் பாரம்பரிய மிக்க உலக கோப்பை கபடி போட்டியை சென்னையில் நடத்துவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.