என்ஜினியரிங் படிப்புகளுக்கான புதிய கட்டணத்தையும், பேராசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பையும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000, அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என்றிருந்தது. தற்போது உயர்ந்து குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்ச கட்டணம் – அதிகபட்ச கட்டணத்துக்குள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
மேலும், 3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500ம், அதிகபட்சமாக ரூ.1,94,100ம், 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000ம், அதிகபட்சமாக ரூ.1,95,200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் 7-வது சம்பள கமிஷன் வரையறுத்துள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்றும் ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189 ஆகவும், பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 ஆகவும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது எனவும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.








