தமிழ்நாடு சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது.
இந்த நிலையில் இன்று காலை அவை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார். அப்போது, “மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது.
தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு நடைபெறும்” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நிதி பகிர்வு தொடர்பாக தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு அளித்ததன் மூலம் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.




