இன்னும் வடியாத மழைநீர்: படகில் பயணிக்கும் மக்கள்

பூந்தமல்லி அருகே மழைநீர் வடியாததால் வீடுகளுக்கு செல்ல அந்தப் பகுதியின் படகு ஒன்றை உருவாக்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியாமல்…

பூந்தமல்லி அருகே மழைநீர் வடியாததால் வீடுகளுக்கு செல்ல அந்தப் பகுதியின் படகு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தேங்காமல் இருக்க என்ன தீர்வு?” என நியூஸ் 7 தமிழில் இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.

அதன்படி பூந்தமல்லி யமுனா நகருக்கு நமது செய்தியாளர் சென்றார். அங்கு ஐந்தடி முதல் எட்டடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் சொந்தமாக படகு ஒன்றை வாங்கிய தகவல் தெரிய வந்தது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக இந்தப் பகுதிக்கு செல்ல இவர்கள் படகை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள், தண்ணீருக்குள் இறங்கி செல்ல முடியாது என்பதால் அவர்களும் இந்தப் படகை பயன்படுத்தியே சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்த பகுதியில் யாரும் என்ன பிரச்னை என்று கூட கேட்கவில்லை.வேலைக்கு செல்பவர்கள் இரவு பத்தரை மணிக்கு வீட்டுக்குத் திரும்புகின்றனர். அவர்களை இந்தப் படகில் சென்றுதான் அழைத்து வருகிறோம். பாம்பு போன்றவற்றின் தொல்லைகளும் இருப்பதால் பயமாக இருக்கிறது. கடந்த 20 வருடமாக இந்தப் பகுதியில் வசிக்கிறோம். இப்படி தண்ணீர் பிரச்னை வந்திருப்பது இது ஆறாவது முறை. கால்வாய் வசதியை ஏற்படுத்துவது, சாலையை உயர்த்தி அமைப்பது போன்றவைதான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும்’ என்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.