சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே காணப்பட்ட மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்த உள்நாட்டு போரின் காரணமாக ஏராளமான இந்தியர்கள் சூடானில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சூடானின் தலைநகர் கார்ட்டூமில் சண்டை அதிகரித்துள்ளதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து, சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது சிம்புவின் ”பத்து தல”
இதைத்தொடர்ந்து சூடான் போர் நிலவரம் மற்றும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க “ஆபரேஷன் காவிரி” எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் சுமார் 500 பேர் மீட்கப்பட்டு, சூடான் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு, இந்தியாவின் ஐ.என்.எஸ். கப்பல் உதவியுடன், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனி விமானம், தலைநகர் டெல்லியை வந்தடைந்தது. இதனிடையே, சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 297 இந்தியர்கள், ஐ.என்.எஸ். கப்பல் மூலம் ஜெட்டா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.









