பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ந்தேதி முதல் 18ந்தேதிவரை சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக உள்ள விஜய் மற்றும் அஜித் நடித்த படங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரே நேரத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. அடுத்த மாதம் 12ந்தேதி வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்புக் காட்சிகளை திரையிட தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே போகிபண்டிகை, பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என 14-1-2023 முதல் 17-1-2023 வரை 4 நாட்கள் சிறப்பு காட்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் தினத்திற்கு ஒரு சில நாட்கள் முன்பே புது திரைப்படங்கள் ரிலீசாவதை கருத்தில்கொண்டு, வரும் 12-1-2023, 13-1-2023 ஆகிய நாட்களிலும் மற்றும் 18-1-2023 தேதியிலும் சிறப்புக்காட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.