அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னணி தலைவர்கள் வாழ்த்திப் பேசி வந்தனர். நத்தம் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருக்கையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் முழக்கம் எழுப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மைக்கைப் பிடித்த கே.பி.முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையையடுத்து, அவரை நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார். இறுதியாக ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்புத் தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் கொண்டுவந்தார்.
தீர்மானத்தை வாசித்த நத்தம் விஸ்வநாதன், “அதிமுக கொள்கைக்கும், கோட்பாடுக்கும் விரோதமாக செயல்பட்ட பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியை பலவீனப்படுத்தும் விதமாக திமுக அரசுடன் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கிறார். காவல்நிலையத்தில் புகார் தந்தது அதிமுக சட்டவிதிகளுக்கு முரணானது. கட்சியினர் மீது வழக்கு தொடர்ந்து, சுயநலன் சார்ந்து அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
தான் அங்கம் வகித்த கட்சியைப் பற்றி குறைசொல்வது கண்டிக்கத்தக்கது. கட்சி விதி எண் 35-இன் படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்சியின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்படுகிறார். அவருடன் அதிமுகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” என்று அறிவித்தார்.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியபோது பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாக முழக்கம் எழுப்பி வரவேற்றனர். இதேபோல வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோரையும் நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.