கர்நாடகா பாடப்புத்தகத்திலிருந்து ‘பெரியார்’ பற்றிய பகுதிகள் நீக்கம்; வைகோ கண்டனம்

கர்நாடகாவில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த பெரியார், நாராயண குரு ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.…

கர்நாடகாவில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த பெரியார், நாராயண குரு ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல், உண்மையான வரலாறுகளை மறைத்து, மதவெறிப் பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் எழுதிக் கொடுப்பதை, கற்பனைப் புராணங்கள் இதிகாசங்களை, வரலாறாகக் கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், குருகுலக் கல்வியை நிலை நாட்டுகின்ற வகையில் புதிய பாடத்திட்டத்தைக் கற்பிக்க முனைவதாக குறிப்பிட்டுள்ள அவர்,

செத்துப்போன சமஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க 650 கோடி ரூபாய் செலவில் மூன்று பல்கலைக்கழகங்களை நிறுவி இருப்பதாக சாடியுள்ளார். மேலும், கர்நாடக பாரதிய ஜனதா கட்சியின் அரசு, தன் பங்குக்கு, கர்நாடக மாநில வரலாறைத் திரிக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள அவர், ஆங்கில அரசை எதிர்த்துப் போர் புரிந்து வீர வரலாறு படைத்த திப்பு சுல்தான் குறித்த பாடங்களை, ஒன்று முதல் பத்து வரை பள்ளிப் பாடங்களில் இருந்து ஏற்கனவே நீக்கி விட்டதாக தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘நீட் தேர்வு அச்சம் – பெண் டாக்டர் உயிரிழப்பு’

இந்நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த பெரியார், நாராயண குரு ஆகியோரைப் பற்றிய குறிப்புகளை நீக்கி இருப்பதாக தெரிவித்துள்ள அவர், மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவார் பேசியதை பாடமாக ஆக்கி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், முழுக்க முழுக்க மதச்சார்பு அமைப்புகளைப் பற்றி எழுதி இருப்பதாக தெரிவித்துள்ள அவர், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வன்முறைகளைத் தூண்டி, பிஞ்சுக் குழந்தைகள் மாணவர்கள் மனங்களில், மதவெறியைப் புகுத்த முனைகின்ற கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசின் முயற்சிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாகவும், எவ்வளவுதான் முயற்சித்தாலும், பெரியார் நாராயண குரு ஆகியோரின் பெயர்களை, அவர்கள் நிகழ்த்திய சமூக சீர்திருத்த புரட்சியை, வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைத்து விட முடியாது என வைகோ தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.