வெளிச்சந்தையில் உயர்ந்துள்ள தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகளில் தக்காளியை மலிவான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெய்து வரும் மழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாயைக் கடந்து இருக்கிறது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்திவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக முதற்கட்டமாக 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய் முதல் 85 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து தக்காளியின் வெளிச் சந்தை விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் கூட்டுறவுத்துறை நடத்திவரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி மலிவான விற்பனையில் விற்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக தரமான தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவான விலையில் வாங்கி பொதுமக்கள் பயன் பெறுமாறும் அமைச்சர் பெரியசாமி கேட்டுக்கொண்டார்.








