பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற பதாகையை ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் நிறுவ சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற பதாகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிட கோரி பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதமாவது :
* இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1947விதி 48 படி இந்து அல்லாதவர்கள் இந்து கோயிலுக்குள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான ஆணை தெளிவாக உள்ளது.
* பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்.
* இந்து அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் ஏற்கனவே இருந்த அதே இடத்தில் நிறுவ வேண்டும் என கோரப்பட்டது.
அப்போது இந்து அல்லாதவர்கள் கோயிலில் நுழைய தடை என்ற பதாகை ஏன் அகற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஸ்ரீமதி, தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் கூறினார்.
இதனை அடுத்து இந்து அல்லாதவர்கள் கோயிலில் நுழைய தடை என்ற பதாகையை ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும் என உத்தரவிட்டார். அதோடு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டார்.







