கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாகப் பழகிய இளம்பெண்ணைக் காதலிக்குமாறு வற்புறுத்தி, கார் ஷோருமுக்குள் புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் பைனான்ஸ் பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தினேஷ் என்பவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தினேஷ் சுபஸ்ரீயை காதலிப்பதாகவும் தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் சுபஸ்ரீ காதலை ஏற்க மறுத்ததோடு தினேஷின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் கடந்த இரண்டு மாதங்களாக தினேஷ் உடன் பேசுவதை முற்றிலும் சுபஸ்ரீ தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஆத்திரம் அடைந்த தினேஷ் நேற்று மதியம் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள சுபஸ்ரீ பணிபுரியும் ஷோரூமுக்குள் சென்றுள்ளார். அப்போது பணியிலிருந்த சுபஸ்ரீயிடம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சுபஸ்ரீ தான் காதலிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபஸ்ரீயை தாக்கியுள்ளார்.
அந்த தாக்குதலில், தலை, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுபஸ்ரீக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, பணியிலிருந்த சகப் பணியாளர்கள் தப்பிச்செல்ல முயன்ற தினேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். மேலும் படுகாயங்களுடன் காணப்பட்ட சுபஸ்ரீயை மீட்ட போலீசார் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பந்தயச் சாலை போலீசார் தினேஷை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.