தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரெட் அலர்ட்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறி வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை பேரிடர் மீட்பு குழுவைச் சார்ந்த 30 பேர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர்.
அம்பாசமுத்திரம் நீதிமன்றம் வளாகத்தில் இருந்து அம்பாசமுத்திரம் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் 30 வீரர்கள் சாலையில் பேரணியாக சென்று மக்களுக்கு மழைக்காலங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கல்யாணி தியேட்டர் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக 456 இடங்களில் புயல் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மழைக்காலங்களில் ஏற்படும் மண்சரிவு மற்றும் நிலசரிவுகளை சரிசெய்ய அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு உதகை, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இரவு போக்குவரத்திற்கு தடை
மேலும் நீலகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதையடுத்து அம்மாவட்ட ஆட்சியரின் வேண்டுதலின்படி நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் செல்லும் அனைத்து வாகனங்களும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வரும் 3 நாட்களுக்கு தடைசெய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.