2022 – ஆம் ஆண்டில் மட்டும் மோசடிகளில் சிக்கி பொதுமக்கள் இழந்த 95 கோடியே 85லட்சத்து 49 ஆயிரத்து 715 ரூபாயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக சென்னை காவல்துறை அளித்த புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
சென்னையில் பெரிய அளவில் நடைபெறும் ஆன்லைன் மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, வங்கி மோசடி, ஆவண மோசடி, கந்துவட்டி மோசடி, நில அபகரிப்பு மோசடி, மரபுசார் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க மத்திய குற்றப்பிரிவில் தனித்தனி பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. பெரிய அளவிலான மோசடிகளை தடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு பொதுமக்கள் மோசடிகளில் சிக்கி இழந்த 95கோடியே 85லட்சத்து 49 ஆயிரத்து 715 ரூபாய் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீட்டுக்கொடுத்துள்ளதாக சென்னை காவல்துறை புள்ளி விவரங்களில் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவில் பெறப்பட்ட புகார்களில் 517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள 1058 வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டதாகவும், அதில் 565 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு 478 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு 39 வழக்குகள்
அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் 2022 ஆம் ஆண்டு ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்ட 30 பேரை வெளி மாநிலங்களில் வைத்து கைது செய்ததாகவும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 71 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 97 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலமாக தண்டனை வாங்கி கொடுத்துள்ளதாகவும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள 216 குற்றவாளிகளுக்கு எதிராக பிடிவாரண்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் , 65 தலைமறைவு குற்றவாளிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு 7056 மனுக்கள் பெறப்பட்டு, 6591 மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மத்திய குற்றப்பிரிவில் கடந்தாண்டு பொதுமக்கள் மோசடிகளில் சிக்கி இழந்த 95கோடியே 85 லட்சத்து 49ஆயிரத்து 715 ரூபாயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீட்டு கொடுத்திருப்பதாகவும், கடந்த 2021-ஆம் ஆண்டு மீட்கப்பட்ட தொகை 154.4 கோடி ரூபாய் எனவும் கூறப்பட்டுள்ளது . இது 2021ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டு மீட்கப்பட்ட தொகை மிக குறைவாகவே உள்ளது.
குறிப்பாக 2022ஆம் ஆண்டு மட்டும் நிலமோசடி வழக்குகளில் 81கோடியே 98 லட்ச ரூபாய் அசையா சொத்துக்கள் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாக ஆன்லைன் லோன் ஆப் மோசடி உருவெடுத்து வரும் நிலையில், கடந்தாண்டு மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட ஜம்தாரா கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து 50க்கும் மேற்பட்ட செயலியை முடக்கியது. அதே போல பல்வேறு முக்கிய குற்ற வழக்குகளை கண்டறிந்து கடந்தாண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் வழக்குகளை எப்படி கையாள்வது என்பது தொடர்பான விரிவான நிலையாணை அனைத்து காவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.அதில் கிரிப்டோகரன்சி மோசடி, கடன் செயலி மோசடி, ஸ்கிம்மர் மோசடி, தொலை தூர செயலி மூலம் மோசடி உள்ளிட்ட பல வழக்குகளின் பட்டியல் வடிவமைக்கப்பட்டு நிலையாணை அளிக்கப்பட்டுள்ளது. கணினி வழி குற்றங்களை தடுத்திட முத்துவும் 30 திருடர்களும் என்ற கையெடு வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.