பிரிட்டன் தலைநகர் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. நாளுக்கு நாள் வெப்ப நிலை புதிய உச்சத்தை தொட்டு மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.
மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இவ்வாறான வெப்ப நிலையை சந்திப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை தருகிறது. 2019ம் ஆண்டு லண்டன் மாநகரம் அதன் உட்சபட்ச வெப்பநிலையான 38.7 டிகிரி செல்சியஸை எட்டியது. தற்போது வீசிவரும் வெப்ப அலையானது அந்த புள்ளியை கடந்து 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
பசுமை இல்ல வாயுக்களால் ஏற்பட்ட உலக வெப்பமயமாதலே இது போன்ற கடும் வெப்ப நிலை உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. லண்டன் போன்ற மிதமான வெப்ப நிலை நிலவும் நாட்டின் இந்த அதீத வெப்பம் என்பது நினைத்து பார்க்காத மாற்றமாக உள்ளது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தொழில்துறை மாற்றத்திற்கு முன்பு இருந்த வெப்ப நிலையை ஒப்பிடும் போது தற்போது நிலவி வரும் வெப்ப நிலையானது 10 மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் லண்டனின் குடியிருப்பு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடும் வெப்பம் நிலவியதால் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவி அந்த இடமே புகை மண்டலமாக மாறியுள்ளது.100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய அதிகாரிகள், வழக்கமாக தீயணை துறைக்கு 300 முதல் 350 புகார்கள் வரும் நிலையில் தற்போது 1,600 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
முதல் ரெட் அலெர்ட் நிலையில் உள்ள லண்டன் நகரில், பெரும்பாலான ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் உணவும், barbeque போன்ற உணவுகளை வெளியே சமைப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








