தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் வைக்கும் நிலைமை வந்தால், அதில் திமுக வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு விலக தயார் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் வடக்குத்தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், அதிமுகவினர் கலந்து கொண்டனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் கே.ராஜு, மின் கட்டண உயர்வால் திமுக அரசு தமிழக மக்களை கசக்கி பிழிகிறது என்று தான் சொல்ல வேண்டும் என்றார்.
திமுக அரசு சொன்னதை எதையுமே நிறைவேற்றவில்லை. ஒன்று இரண்டை நிறைவேற்றி விட்டதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள், முழு பூசணிக்காயை குண்டு சட்டிக்குள் மறைக்க பார்க்கின்றனர். பொய் சொல்லி மக்களை ஏமாற்றி உள்ளனர். நாங்கள் குறை சொன்னால் எதிர்க்கட்சி காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார்கள் என கூறுகின்றனர். திமுக எதுவும் செய்யவில்லை என மக்கள் சொல்கிறார்கள்.
வீட்டுவரி உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். திமுக அரசு எதையுமே செய்யாமல் வாகளித்த மக்களை வாட்டி வதைத்து வருகின்றனர். வாக்களித்த
மக்கள் இந்த ஆட்சி பிடிக்கவில்லை வேறு ஆட்சியை மாற்றிக்கொள்ளலாம் என சட்டம் இருந்தால் திமுக அரசு மாற்றப்பட்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மக்களால் கொண்டு வரப்படும். அப்படி ஒரு வாய்ப்பு இல்லையே என மக்கள் ஏங்கிக் கொண்டுள்ளதாக கூறினார்.
திமுக ஆட்சியில் மக்களுக்கு துன்பம் துயரம் நிறைந்துள்ளது, திமுக ஆட்சியில் ஒரு கொடுமை சென்றால் இன்னொரு கொடுமை நடக்கிறது. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் பயத்தில் உள்ளனர். பயத்தில் உள்ள மக்களுக்கு பூஸ்ட்டாக ஏதாவது கொடுக்க வேண்டும், ஆனால் துன்பத்தையும், துயரத்தையும் மட்டுமே கொடுக்கும் வகையில் திமுக தலைமையிலான அரசு செயல்படுகிறது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது, மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தொழிலதிபர்கள் சந்தோஷமாக இல்லை, மின் வெட்டு இருக்கும் போது மின் கட்டண உயர்வு வேறா, ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என எப்போதும் மத்திய அரசை குறைசொல்லி எங்களை அடிமை அரசு எனக்கூறி தற்போது திமுக அடிமை அரசாக உள்ளனர், கேட்டால் திராவிட மாடல் அரசு எனச் சொல்லுவது கேலிக்கூத்தாக உள்ளது என சாடினார்.
அதிமுக ஆட்சியில் வீட்டு வரி உயர்வுக்கு அட்டையை பிடித்து நின்ற ஸ்டாலினின் தற்போதைய ஆட்சியில் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்றால் மின்சார கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது, ஒரு சீட் இரண்டு சீட் திமுக தற்போது கூட்டணி பலத்தோடு ஆட்சியில் அமர்ந்துள்ளனர், எங்கள் கட்சியில் உள்ள பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம். எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு பொதுச் செயலாளர் ஆக்கி உள்ளோம், தற்போதோ அல்லது நாளைக்கோ தேர்தல் வைக்கச்சொல்லுங்கள். அப்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டே விலகுகிறோம் என்றார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் ஒரு மோசமான விபத்து, மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் வேகமாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை, தூங்கிக் கொண்டுள்ள அரசாங்கம் திமுக அரசு, காலையில் பள்ளி நிர்வாகம் மீது தவறில்லை என டிஜிபி கூறிவிட்டு மாலையில் 3 பேரை கைது செய்கிறார், ஆட்சியர், எஸ்பியை நீக்கம் செய்கிறார்கள், தும்பை விட்டு வாலை பிடிக்கும் அரசாக திமுக உள்ளது என கூறினார். சென்னைக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய அரசு மதுரைக்கு நிதி ஒதுக்கவில்லை, ஒரு சமூகத்தை விட்டு நீக்கியவருக்கு பதிலாக அதே சமூகத்தை சேர்ந்தவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது, அந்த சமுதாயம் ஏமாறக்கூடாது என்ற
அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம்.
உதயகுமார் சிறப்பாக பணியாற்றக்கூடியவர், கொடுத்த பணிகளை சிறப்பாக செய்பவர். நல்ல சட்டமன்ற உறுப்பினர். தென் மாவட்டத்தை சேந்த உதயகுமாருக்கு எதிர்க்கட்சி
துணைத்தலைவர் ஆனது பெருமை அளிக்கிறது, அதிமுக எப்போதும் சாதி மத இன பாகுபாடு பார்க்காத கட்சி, அதிமுக ஒன்றாகத்தான் உள்ளது. தொண்டர்கள் நிர்வாகிகள்
ஒன்றாகத்தான் உள்ளோம், ஓபிஎஸ் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது குறித்த கேள்விக்கு, பல இன்னல்களிடயே அதிமுக வளர்ந்தது, எம்ஜிஆர், ஜெயலலிதா காலம்
தொட்டே அதிமுக பல்வேறு பிரச்சனைகளிடையே வளர்ந்து தொண்டர்களால் செயல்பட்டு வருகிறது, அதிமுகவில் பல்வேறு காலகட்டங்களில் பிரிந்து சென்ற தலைவர்கள்
திரும்பி வருவது உண்டு, ஆர்.எம்.வீரப்பன் தொடங்கி கண்ணப்பன் வரை கட்சியை விட்டு சென்றுவிட்டு திருப்பி வந்துள்ளனர்.
அவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா, இதேபோல் தியாகம் செய்து வளர்த்த அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் கட்சிக்கு திரும்பி வரவேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் பெறுவோம் எனக்கூறி மாணவர்களை திமுக அரசு திரும்ப திரும்ப ஏமாற்ற வேண்டாம் என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.
– இரா.நம்பிராஜன்








