“மின்வாரியம் மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு நேரடியாக விவாதிக்க தயார். ஆதாரத்துடன் வாருங்கள்.” என அண்ணாமலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்று சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 24 மணி நேரத்திற்குள் செய்தியாளர்களை சந்தித்து தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை வழங்க வேண்டும். இல்லையென்றால் மன்னிப்பு கட்டாயமாக கேட்க வேண்டும் என கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “தனியார் நிறுவனத்திற்கு சிறப்பு சலுகை வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து தெரியவில்லை என்றால் தெரிந்து கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை பேச வேண்டும். அவரை போல சமூக வலைதளத்தில் மட்டும் பணி செய்பவன் நான் இல்லை. பொது வாழ்வில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாது. ஆதாரமில்லாமல் கண்டபடி உளறி வருகிறார்.” என காட்டமாக விமர்சனம் செய்தார்.
மேலும், “அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இனிமேல் ஆதாரத்துடன் மட்டுமே அரசின் மீது குற்றச்சாட்டுகள் வைக்க வேண்டும். ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை போன்றவர்கள் குற்றச்சாட்டுகளை வைத்தால், அதற்கு இனிமேல் பதில் கூற போவதில்லை. அவர் வைத்த குற்றச்சாடு தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் ஆதாரத்தை வெளியிடாவிட்டால், கட்டாயமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க களத்தில் நேருக்கும் நேர் சந்திக்கவும் தயார், அவரை போல சமூக வலைதளங்களில் விளையாடவும் தயார். இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்து விட்டு சொன்னால், விவாதிக்கலாம்.” என்று அமைச்சர் கூறினார்.