திருக்குறள் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது என்றும், ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். அத்துடன், தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிகப் பழமையானது என்றும், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் யோக கலையின் முக்கியத்துவம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார். இதையடுத்து, தமிழ் அறிஞர்கள் காலனி மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான பொருட்களை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அண்மைச் செய்தி: ‘‘வீடுகளை அகற்றுவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல’ – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்’
ஆளுநரின் இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல தரப்பினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆளுநரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சனாதனத்தைத் தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதைப் படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள்”.








