கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற புகைப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட், டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. அடுத்த டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இதற்கிடையே, 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது நாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு உள் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவமனை சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் காயமடைந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.
இதன் காரணமாக, அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் அவருக்குப் பதில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.








