திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் முதல் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு உடனடியாக திருச்சி போலீசார் விசாரணையில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதன் பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. பல கட்ட விசாரணைகள் நடந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால், தமிழக அரசு இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும் சிபிஐயின் விசாரணைக்கு உதவுவதற்காகவும் சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தனர். சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்பியாக சிபிசிஐடியின் எஸ்பி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். பத்துக்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்கள் அடங்கிய குழுவானது விசாரணையை துரிதப்படுத்தியது.

ராமஜெயம் கொலை நடந்த காலகட்டத்தில் சந்தேகப்படும் படியான பிரபல ரவுடிகள் 12 பேரின் செல்போன் இணைப்புகள் ஆக்டிவாக இருந்ததை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை துவக்கினர். இந்த 12 பேரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த கோரி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வு சோதனை கூடத்தில் திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ் மற்றும் சத்யராஜ் ஆகிய நான்கு பேரிடம் உண்மை கண்டறியும் சோதனைக்காக ஆஜராகினர். நான்கு பேருடன் அவர்களுடைய வழக்கறிஞரும் விசாரணையின் போது உடன் இருப்பார்கள். ஏற்கனவே நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர், உண்மை கண்டறியும் சோதனையின் போது, ராமஜெயம் வழக்கை குறித்து மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை குறித்து விசாரணை அதிகாரிகள், இதில் சந்தேகப்படும் நபர்கள் ஒவ்வொருவரிடமும் சுமார் 15க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு, அப்படி கேட்கப்படும் போது அவர்களுடைய நாடித்துடிப்பு மற்றும் பிற உடல் அளவீடுகளை பதிவு செய்து அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அவர்கள் கூறும் பதில்கள் உண்மையானவையா அல்லது உண்மைக்கு மாறானவையா என்பதை ஆய்வுகள் மூலம் கண்டுபிடிப்பார்கள்.
நான்கு பேரில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக, ஒன்றன்பின் ஒன்றாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள எட்டு பேர்களிடம் நாளை விசாரணை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் மோகன்ராமிடம் சுமார் 2 மணி நேரம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நரைமுடி கணேஷ், தினேஷ், சத்யராஜ் ஆகியோரிடம் நடத்தப்பட உள்ளது. இன்று மாலை வரை இந்த உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.







