ராமஜெயம் கொலை வழக்கு: 30 பேரிடம் விசாரணை – சிறப்பு புலனாய்வு தகவல்

ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.   தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச்…

ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்ற போது மர்மமான நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும், கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில காவல்துறையினரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் தலைமையில் அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது, ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணை நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.