நடந்து முடிந்துள்ள ராஜ்யசபா தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும், பாஜகவிலும் எட்டப்பர்கள் உள்ளனர் என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் இருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் யாரும் எதிர்பாரத வகையில் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரும், மீடியா அதிபருமான கார்த்திகேய சர்மாவிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். அதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜீ டிவி குழும அதிபர் சுபாஷ் சந்திரா தோல்வியடைந்துள்ளார்.
ராஜ்ய சபாவில் மொத்தம் 250 எம்பிக்கள் உள்ளனர். இதில் 238 பேர் எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அது போக 12 பேர் குடியரசுத் தலைவர் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது 245 எம்பிக்கள் அவையில் இருக்கிறார்கள். நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்ய சபா எம்.பி. பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் மொத்தம் 6 எம்பிக்கள் பதவிக்காலம் முடிவு பெறுகிறது. இதில் திமுக இந்த முறை 4 எம்பிக்களை பெற முடியும். திமுக கூட்டணி சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியிட்டார்கள். காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரம் போட்டியிட்டார். இவர்கள் 6 பேருமே போட்டியின்றி தேர்வாகினர்.
மாநிலங்களவை எம்.பி தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் மூன்று இடங்களையும், பா.ஜ.க ஒரு இடத்தையும் கைப்பற்றின. காங்கிரஸ் சார்பில் நின்ற முகுல் வாஸ்னிக், ரன்தீப் சுர்ஜிவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக சார்பில் ஹின்சியாம் திவாரி வெற்றி பெற்றுள்ளார். சுயேட்சையாக களமிறங்கிய ஜீ குழும அதிபர் சுபாஷ் சந்திரா தோல்வியடைந்துள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் எதிர் முகாமிற்கு வாக்களித்ததாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஷோபாராணி குஷ்வாஹாவை அக்கட்சி இடை நீக்கம் செய்துள்ளது. மேலும் அவரின் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கட்டுகோப்பான கட்சி என்ற இமேஜிற்கு இவரது நடவடிக்கையால் களங்கம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி கருதுகிறது. இவர் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரிக்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தலில் தங்களது கூட்டணியில் பிரபுல் பாட்டேலுக்கு ஒரு வாக்கு அதிகம் கிடைத்துள்ளது. இது எங்கிருந்து கிடைத்தது என்பது எங்களுக்கு தெரியும். இது எங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அம்மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், எங்கள் வேட்பாளர் மூவருமே வென்றுள்ளனர். இது தங்களுக்கு மகிழ்ச்சி தரும் தர்ணம் என்றும், சிவசேனாவின் சஞ்சய் ரத்தைவிட அதிக வாக்குகள் பெற்றுள்ளோம் என்றார்.
ஹரியானா மாநிலங்களவைத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்ட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் யாரும் எதிர்பாரத வகையில் தோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்து நின்று மீடியா அதிபர் கார்திகேய சர்மா வென்றுள்ளார். இவரை பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரித்துள்ளனர். இவரது வெற்றிக்காக பாஜக கடுமையாக உழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அஜய் மக்கானுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய ஒருவர் நேற்று வாக்களிக்கவில்லை. மற்றொரு வாக்கு செல்லாத வாக்காக மாறி விட்டது. மற்றொரு எம்.எல்.ஏ., எதிர் முகாமிற்கு வாக்களித்து விட்டார். இதுவே இவரது தோல்விக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் இருந்து பாஜக வேட்பாளர்கள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹர் சிங் சிரோயா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். நான்காவது எம்.பி சீட்டுக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றுள்ளார். மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் குபேந்திரா ரெட்டி, காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் ஆகியோர் சரிசமமாக வாக்குகளை பிரித்ததால் தோல்வியடைந்தனர்.
இராமானுஜம்.கி