ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் சென்ற ராஜ்நாத் சிங், இன்று ஜம்முவில் நடைபெற்ற மகாராஜா குலாப் சிங் ராஜ்யாபிஷேகம் செய்துகொண்டதன் 200ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததை சுட்டிக்காட்டினார். இதன்மூலம், ஜம்மு பிராந்தியத்தில் 43 தொகுதிகளும், காஷ்மீர் பிராந்தியத்தில் 47 தொகுதிகளும் என மொத்தம் 90 தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடைந்துவிட்டதால் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் கில்ஜித் – பல்திஸ்தான் பகுதிகளும் மகாராஜா குலாப் சிங்கின் ராஜ்யத்தின் கீழ் இருந்ததாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், இந்த பகுதிகள் இந்தியாவின் ஓர் அங்கம் என நமது அரசியல் சாசனத்திலும் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
ஆனால், பாகிஸ்தானில் 1956, 1962, 1972, 1973 ஆகிய ஆண்டுகளில் இயற்றப்பட்ட எந்த ஒரு அரசியல் சாசனத்திலும் இந்த பகுதிகள் அந்த நாட்டின் அங்கம் என குறிப்பிடப்படவில்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட் சமூகம் உள்பட யார் ஒருவரும் கட்டாயமாக வெளியேற்றப்படுவதை மத்திய அரசு அனுமதிக்காது என தெரிவித்த ராஜ்நாத் சிங், காஷ்மீரின் சமூக ஒற்றுமை பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றார்.
பாகிஸ்தான் தூண்டுதல் காரணமாக நீண்ட காலமாகவே ஒரு குழுவினர், இந்தியாவுக்கு எதிராகவும், பிற சமூக மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், எனினும், பெரும்பாலான மக்கள் ஒற்றுமையையே விரும்புவதாகத் தெரிவித்தார்.










