ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ ஆதரவும், ஜி.கே.வாசன் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற 6 பேரும் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்தவாக அறிவித்துள்ளது.
6 பேர் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்ததையடுத்து, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியூஸ் 7 தமிழுக்கு தொலை பேசி வாயிலாக அளித்த பிரத்யேக பேட்டியில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு இல்லாத இவர்களது வாழ்க்கை 30 ஆண்டுகள் சிறையில் கழிந்துவிட்டது. இதை மீண்டும் கொடுக்க முடியாது. இந்த தீர்ப்பு சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு ஓரளவுதான் திருப்தி அளிக்கும். குற்றமே புரியாமல் அவர்கள் சிறையில் இருந்துள்ளனர். அரசே அவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்தபோது, ஆளுநர் அதனை தடுத்து நிறுத்தினார். ஆனால், உச்சநீதிமன்றம் இன்றைக்கு வழங்கிய தீர்ப்பு ஆளுநருக்கு கிடைத்துள்ள சரியான பதிலடி என தெரிவித்தார்.
தாமக தலைவர் ஜி.கே.வாசன் தொலைபேசி வாயிலாக நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ராஜீவ்காந்தி மரணத்தை மறைக்கவும் முடியாது, மண்ணிக்கவும் முடியாது என்றார். எந்த அடிப்படையில் தீர்ப்பு இருந்தாலும், இது மக்களுக்கு ஆச்சரியமான தீர்ப்பாக இருக்கிறது. ராஜீவ்காந்தியுடன் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக தான் நான் கருதுகிறேன் என்றார்.