நடிகர் ராஜேஷின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

நடிகர் ராஜேஷின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் நடிகர் ராஜேஷ்.

150க்கும் மேலான படங்களில் நடித்து கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்த அவர் இன்று காலமானார். ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னைகள் இருந்து வந்த நிலையில், இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. இவருக்கு வயது (75). ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் திடீர் மறைவுக்கு தமிழ் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ராஜேஷின் மறைவு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

“என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்”. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.