காதலருடன் தொடர்ந்து பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், விஷப்பாம்பை பயன்படுத்தி மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு, ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு (Jhunjhunu) மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் அல்பனா. அவருக்கும் ராணுவத்தில் பணிபுரியும் சச்சின் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு சச்சின் வேலைக்கு சென்று விட்டார். மாமனாருக்கும் வெளியூரில் வேலை. இதனால், வீட்டில் மாமியார் சுபோத் தேவியும் அல்பனாவும் மட்டுமே இருந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அல்பனா, தனது முன்னாள் காதலர் மணீஷ் என்பவருடன் அடிக்கடி போன் செய்து பேசத் தொடங்கினார். அடிக்கடி போனில் அரட்டை அடிக்கத் தொடங்கினர். இதை மாமியார் கண்டுபிடித்து, கண்டித்தார். இதனால் மாமியாரை கொன்றுவிட முடிவு செய்தார் அல்பனா. இதுகுறித்து காதலர் மணீஷுடன் ஆலோசித்தார். அவர்தான் பாம்பு ஐடியாவை சொன்னார்.
அதாவது பாம்பு பிடிப்பவரிடம் சொல்லி, விஷப்பாம்பை வாங்கி வந்து மாமியாரின் பெட் ரூமில் வைத்துவிட வேண்டும். பாம்பு கடித்து அவர் இறந்த பிறகு அதை அப்படியே சொல்லி தப்பித்துவிடலாம் என்றும் முடிவு செய்தனர். அந்த திட்டத்தின்படியே செயல்பட்டனர். நினைத்தது போலவே மறுநாள் காலையில் பாம்பு கடித்து அவர் உயிரிழந்திருந்தார். அந்தப் பகுதியில் பாம்பு கடித்து உயிரிழப்பது சகஜம் என்பதால், உறவினர்களும் ஊர்க்காரர்களும் அதை நம்பினர்.
ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அல்பனா மீது உறவினர்களுக்கு சந்தேகம். போலீசில் புகார் செய்தனர். அல்பனாவின் போனையும் சோதித்தனர். மாமியார் இறந்த நாளன்று ஒரே நம்பருக்கு சுமார் நூறு முறை பேசியிருந்தார், அல்பனா. யாரும்மா அது? என்று போலீசார் விசாரிக்க, காதல் கதையும் விஷப்பாம்பால் மாமியாரைக் கொன்றக் கதையையும் சொல்லி இருக்கிறார் அல்பனா. பிறகு அவர், அவருடைய காதலர், அவருக்கு உதவியவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்தது.
இந்நிலையில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார் அல்பனா. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம், விஷப்பாம்பை பயன்படுத்தி மாமியாரை கொன்றிருப்பது கொடுமையானது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.