தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து பல இடங்களில் பரவலாக மழை பெய்கிறது. சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர் போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளகான அம்பத்தூர், ஆவடி, தாம்பரம் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.








