தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பகலில் வெயில் வாட்டி எடுப்பதால் வெளியே வருவதற்கே அச்சப்படும் சூழலும் உருவாகியுள்ளது. எனினும் தமிழ்நாட்டின் அநேக பகுதிகளில் அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிககன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளது. வரும் 17ம் தேதி வரை மழை இருக்கலாம் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.