மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி

பருவ மழை தொடங்கியதில் இருந்து மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு…

பருவ மழை தொடங்கியதில் இருந்து மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், பருவ மழை காலத்தில் மின் விநியோகத்தில் எந்த வித இடையூறும் ஏற்படாமல் இருக்க செய்யப்படும் நடவடிக்கைகள் குறித்து மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் படி இதுவரை 14,69,000 பராமரிப்பு சிறப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. 40,000 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 32,685 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 1,800 கி.மீ தொலைவுக்கு மின் கம்பிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 18,380 மின் மாற்றிகள் கையிருப்பு உள்ளன. 2 லட்சம் மின் கம்பங்கள் கையிருப்பு உள்ளன” என்று கூறினார்.

மின் புகார்களை பொறுத்தவரை 99% உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள புகார்கள் விரைவில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்த அவர், பருவமழை காலங்களில் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்காக 11 ஆயிரம் பணியாளர்கள் கூடுதலாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். எந்த இடங்களிலும் மின் தளவாடங்களுக்கான பற்றாக்குறைகள் இல்லை எனக் கூறிய அமைச்சர், மழை காலத்தில் தொடர்ந்து அயராது பணியாற்றி வரும் மின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மனமார நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.