தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போல நாளைய (17-10-2021) தினத்தை பொறுத்த அளவில், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.” என தெரிவித்துள்ளது.
மேலும், “சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா – லடச்சத்தீவு கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலோர பகுதியில் நிலைகொண்டுள்ளது.” என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல, 16.10.2021, 17.10.2021 ஆகிய இரு நாட்களிலும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அளவிலும், அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும்
வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியை பொறுத்த அளவில், பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.