ராகுல் காந்தியின் பயணம் காஷ்மீரில் புதிய காற்றை சுவாசிப்பது போல் உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் நிறைவடைகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களைக் கடந்து நடைபயணத்தின் இறுதி பகுதியான ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இன்று தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கலந்து கொண்டார். முப்தியுடன் நிறைய பெண்களும் கலந்து கொண்டனர். சுர்சு என்ற இடத்தில் பல தொண்டர்கள் முன்னியிலை இருவரும் நடைபயணத்தை மேற்கொண்டனர்
இந்த நடைபயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், ராகுல் காந்தியின் நடைபயணம் வருவது காஷ்மீரில் புதிய காற்றை சுவாசிப்பது போல் உள்ளது. 2019-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவிலான காஷ்மீரி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளனர். ராகுல் காந்தியுடன் பயணம் மேற்கொண்டது சிறப்பான அனுபவமாக அமைந்து என்று குறிப்பிட்டுள்ளார்.







