கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டுமென பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷில்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஜனவரி மாதம் முன்கள பணியாளர்களுக்கு செலுத்த ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.
இதுவரை வரை 9 கோடிக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரம் தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கவலையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் எனவும், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி என்பது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு நம் நாடு ஈடு செய்ய முடியாத இழப்புகளை சந்தித்து மிகப்பெரிய தியாகங்களை செய்ததாகக் குறிப்பிட்ட ராகுல், இந்தியாவில் தடுப்பூசி தேவை என்பது அதிகரித்து வரும் சூழ்நிலையில் வெளிநாடுகளுக்கு 6 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நமது நாட்டில் தேவைகள் அதிகம் இருக்கும்போது தடுப்பூசி ஏற்றுமதி என்பது விளம்பரத்துக்காக அரசு எடுத்த நடவடிக்கையா ? எனக் கேள்வி எழுப்பிய அவர், தடுப்பூசியின் உற்பத்தி திறனை அதிகரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு உதவவேண்டும். தடுப்பூசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். தடுப்பூசி தேவைப்படும் அனைவருக்கும் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசி மருந்துகளை மாநில அரசுகளே நேரடி கொள்முதல் செய்து விநியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.







