தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
உலுக்கி எடுத்த கொரோனாவில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகிறது, உலகம். இன்னும் பல நாடுகள், அந்த தொற்றில் இருந்து எழவில்லை. கொரோனா உருமாறி வந்து வந்து அவ்வப்போது மிரட்டிச் செல்கிறது. இந்நிலையில் புதிய வகை வைரஸ், தன் கொடூரப் பற்களை காட்டி இருக்கிறது, மிரட்டலாக. தென்னாப்பிரிக்காவில் உருவாகியுள்ள இந்த தொற்று, கொரோனாவை விட கொடுமையானது என்பதால், உலகம் மீண்டும் அச்சத்தில் இருக்கிறது. பி.1.1.529 என்ற புதிய வைரஸுக்கு ஓமிக்ரான் (Omicron) என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வைரஸ் எட்டிப் பார்த்திருக்கிறது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்துள்ளது. இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள வைரஸ்களில் இதுதான் மிக மோசமானது என்கிறார்கள். இதனால், பல்வேறு நாடுகள் அந்த வைரஸை கட்டுப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வரும் அனைத்து விமான பயணிகளையும் தனிமைப்படுத்தி தீவிரமாக சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் மும்பை மேயர் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பராமரிக்கவும் முகக் கவசங்களை தொடர்ந்து அணிய வேண்டும் என்றும் இதன் மூலம் இந்த புதிய அச்சுறுத்தலை தடுக்க முடியும் என்றும் மேயர் கிஷோரி பட்னேகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தச் சூழலை கையாள்வது குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மாலையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.