தாலுகா அலுவலகங்களில் மக்கள் காத்திருக்கும் நிலையை தவிர்க்கவும், ஆன்லைன் விண்ணப்பங்களை தேவையற்ற காரணங்களுக்காக நிராகரிக்கும் போக்கை நிவர்த்தி செய்யவும் சேவைகளுக்கன தர உறுதிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் எம்.ஏ.சித்திக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாலுகா அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டதிலும், இ-சேவை மையங்களில் மக்களிடம் கலந்துரையாடியபோதும் புகார்கள் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சில வட்டாட்சியர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களுக்காக நிராகரித்துள்ளதாகவும், தேவையற்ற வகையில் மக்களை அலைக்கழிக்கும் போக்குகளை தவிர்ப்பதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் தர உறுதிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். தர உறுதிப் பிரிவு அலுவலர்கள் இணையவழி கோப்புகளை ஆய்வு செய்வதன் மூலம் விண்ணப்பங்களின் செயல்பாடு ஆய்வு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
தற்போது ஆணையர் அலுவலகத்தில் உருவாக்கப்படும் தர உறுதிப் பிரிவு, மாவட்ட அளவிலும் அமைக்கப்படும் என்பதுடன், அவர்கள் அறிக்கைகளை வருவாய் நிர்வாக ஆணையரிடம் அளிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் பதிவேற்றிய அறிக்கைகள் உள்ளிட்ட முழு கோப்பையும் பார்க்க முடியும். பல்வேறு நிலைகளில் விண்ணப்பங்களைச் செயல்படுத்தும் அலுவலர்களால் அளிக்கப்பட்ட அறிக்கைகள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்யலாம். விண்ணப்பதாரரிடம் தொலைபேசி வாயிலாகவும் விசாரிக்கும் பணியை மேற்கொள்வர். ஒவ்வொரு மாதமும், வருவாய் நிர்வாக ஆணையம் சில தாலுக்காக்களைத் தேர்வு செய்து விசாரணை மேற்கொள்ளும்.
சான்றிதழ்கள் நியாயமற்ற முறையில் நிராகரிக்கப்படுதல், அங்கீகரிக்கப்பட்டால் தண்டனை நடவடிக்கை மேற்கொள்ள அறிக்கை அளிக்கும். இந்த திட்டம் பட்டா பெயர் மாற்றம், ஓய்வூதியங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
நடவடிக்கை என்ன?
அலுவலர்கள் நேரடியாகவோ, இடைத்தரகர்கள் மூலமாகவோ பணம் கேட்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இந்நிலை மாற வேண்டும். புகார்களின் அடிப்படையில் அல்லாமல், திடீர் ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொள்ளப்படும். விண்ணப்பத்தை நியாயமான முறையில் பரிசீலிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே நோக்கம். நியாயமற்ற முறையில் செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து ஆட்சியர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.