சில அரசுகள் அறிவித்த திட்டத்தையே செயல்படுத்தாத நிலையில், அறிவிக்காத திட்டங்களையும் புதுச்சேரி அரசு செயல்படுத்தி வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை பெருமிதம் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, எந்த விதமான அரசு உதவிதொகையும் பெறாத 21 வயது முதல் 55 வயதிற்குட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்ட துவக்க விழா கதிர்காமல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவில் எந்தவித அரசு உதவித்தொகையும் பெறாத குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தார்.
இந்த திட்டம் மூலம் 70 ஆயிரம் குடும்பத்தலைவிகள் பயனடைகின்றார்கள் என்றும், முதற்கட்டமாக 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகின்றது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பெண்களுக்கு கையில் பணம் இருந்தால் அது அவரது குடும்ப நன்மைக்கு உதவும் என்பதை உணர்ந்து அரசு இந்த குடும்பதலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.
பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையில் அனைத்து திட்டங்களையும் முழுவதுமாக செயல்படுத்துவதில் இந்தியாவிலே புதுச்சேரி மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. சுகாதாரத்தில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதலிடம் பெற்று முன்னேறி வருகின்றது. இந்த அரசு அறிவிக்காததை செய்கின்றது, ஆனால் சில அரசு பல திட்டங்களை அறிவித்தும் செய்யவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசினார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், மகளிருக்கு குடும்பத்தில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் மகளிர் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரபதிவு செலவில் 50 சதவீத கழிவு வழங்கியது பெண்களுக்குமிகுந்த பயனளித்து வருகின்றது. அந்த வகையில் தான் குடும்பதலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
எல்லோருக்கும் அரசு உதவித்தொகை கிடைக்கின்றது என்ற நிலையை எனது அரசு உருவாகியுள்ளது. எந்த குடும்பமும் சாப்பாடு இல்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. இந்த அரசு சொன்னதை நிறைவேற்றும் அரசாக உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலவச மடிக்கணினி மற்றும் சைக்கிள் திட்டம் பிப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.