29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குண்டும் குழியுமான சாலைகளால் பொதுமக்கள் அவதி – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு

சென்னையில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையின் 15ஆவது மண்டலத்தில் அமைந்துள்ள செம்மஞ்சேரி பகுதியில் நிறைவு பெறாத மழைநீர் வடிகால் பணி காரணமாக கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல, சென்னை மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை செல்லக்கூடிய சாலையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே உள்ள மின் கம்பங்களால் இப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பணிகளை முடிப்பதில் தாமதம்  ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் சாலைக்கும், மாதவரம் பால் பண்ணைக்கும் மாதவரம் இணைப்புச் சாலையாக உள்ளது. இப்பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், இப்பணிகளால் இரண்டு கிலோ மீட்டர் தூரம் மண் சாலையில் பயணிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் ஓராண்டுக்கு மேல் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் வடபழனி பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்து காட்சியளிக்கிறது. வடபழனியில் திட்டமிடப்படாத போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். ஒரு கிலோ மீட்டர் சாலையை கடக்க சுமார் அரை மணி நேரம் ஆவதாகவும், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ள பகுதி என்பதால் கூடுதல் நெரிசல் ஏற்படுவதால் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உரிய நேரத்தில் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொளத்தூர் தன்ராஜ்புரம் பிரதான சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழை நீர் வெளியேற்று நிலையம் அமைக்கும் பணிக்கு மின்சாரத் துறை உரிய ஒத்துழைப்பு வழங்காததால் மிகவும் மெத்தனமாக பணி நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மின்சார புதைவட கம்பிகள் மேல் ஆபத்தான வகையில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். மழைக்காலம் நெருங்கி வருவதால் மீண்டும் இப்பணியை கிடப்பில் போட்டுவிடுவார்கள் என பொதுமக்கள் கூறுகின்றனர். இப்பணிகளால் பள்ளிக்கு குழந்தைகளை ஆட்டோவில் கூட்டிச் செல்லும் கட்டணமும் அதிகரித்துவிட்டதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading