மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவுள்ள பொது நுழைவுத்தேர்வை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
2022-2023ஆம் கல்வியாண்டில் இருந்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் என்றும், 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும், விண்ணப்பப்பதிவு தொடங்கிவிட்டதால் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் என்பது உறுதியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தநிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளிலும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும் என எச்சரித்துள்ள அவர், பன்னிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்ணிற்கு ஒரு மதிப்பு இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்து நுழைவுத் தேர்வை திரும்பப் பெறம் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.