காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்களை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் திருநாவுக்கரசா், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த போராட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.