முசிறி அருகே சொத்து தகராறு காரணமாகப் பெற்ற தந்தையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துவேல் (60). இவருக்கு சாந்தகுமார்(36), முரளிதரன்(31) என இரு மகன்கள் உள்ளனர். சாந்தகுமார் சென்னையில் வசித்து வருகிறார். முரளிதரன் திருமணம் ஆன நிலையில் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் தன் மனைவி மற்றும் தந்தை முத்துவேலுடன் வசித்து
வருகிறார்.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து மூத்த மகன் சாந்தகுமார் தந்தையைப் பார்க்க வெள்ளாளப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டு தந்தை முத்துவேலிடம் வாக்குவாதத்தில்
ஈடுபட்டுள்ளார். அப்போது கையில் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தந்தை முத்துவேல் மீது ஊற்றி தீயைப் பற்ற வைத்துள்ளார்.
இதனையடுத்து தீ பற்றியதில் அலறித் துடித்த முத்துவேலின் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரைக் காப்பாற்றினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனையடுத்து முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் முத்துவேல் ஜெகநாதபுரம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீசார் சாந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சொத்து தகராறு காரணமாகப் பெற்ற தந்தையை தீ வைத்துக் கொல்ல முயன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







