சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் மேயர் பிரியா ராஜன், துணைமேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றபின் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், 18 வயதுக்குட்பட்டவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் புகார் மனு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என கூறினார்.
இதற்கு முன்பு, பணம் கேட்டு தன்னை சிலர் மிரட்டுவதாக உயிரை மாய்த்துக் கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு நடிகை சித்ராவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும், பண பலமும் செல்வாக்கும் மிக்க அந்த நபர்கள் குறித்த உண்மையை தான் வெளியே கூறிவிடுவேனோ என்கிற எண்ணத்தில் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் நிரபராதி என சித்ராவின் நண்பர்களுக்கு தெரியும் என்றும் ஆனால் அச்சம் காரணமாக அது குறித்து உண்மையை வெளியில் சொல்ல அவர்கள் தயங்குவதாகவும் ஹேம்நாத் தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ள ஹேம்நாத், காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








