இசையமைப்பாளர் இளையராஜாவை, சங்பரிவார் கும்பல் பின்னால் இருந்து இயக்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் லாக்-அப் மரணங்கள் நிகழாமல் இருக்க நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மனிதரை மனிதர்களே சுமப்பது மனிதாபிமான அடிப்படையில் ஏற்புடையது அல்ல எனக் கூறிய திருமாவளவன், தருமபுர ஆதீனத்தை சேர்ந்தவர்கள் விருப்பப்பட்டால் தோளில் சுமக்கட்டும் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நிகழும் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர், ‘தன்னை அம்பேத்கருடன் ஒப்பிடலாமா முதலமைச்சரை அம்பேத்கருடன் ஒப்பிடலாமா என கங்கை அமரன் கேள்வி எழுப்பியுள்ளார் அவருக்கு இந்த கேள்வியை சங்கபரிவார் கும்பலை சார்ந்தவர்கள் சொல்லி கொடுத்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.
இளையராஜா மற்றும் கங்கை அமரன் பின்னால், சங்பரிவார கும்பல் இருந்து அவர்களை இயக்கி வருவதாகவும், அவர்கள் மீது தாம் பரிதாபப்படுவதாகவும் வேதனைப்படுவதாகவும் தெரிவித்த அவர், நீட் விலக்கு மசோதாவை உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அனுப்பியதை வரவேற்கிறேன், ஆனால், இதில் மேலும் காலம் தாழ்த்தாமல், குடியரசு தலைவருக்கு உள் துறை அமைச்சகம் உடனடியாக அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








