தமிழ்நாட்டில் 1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவிய போது, தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவிய மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் படித்தவர்களுக்கு, அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதில் தமிழ்நாட்டில் காலியாக இருந்த 1021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடத்திய போது, தங்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படவில்லை எனக் கூறி, மருத்துவ படிப்பையும், பயிற்சியையும் முடித்த ஆதம்ஸ் புஷ்பராஜ், ராஜ்குமார் உள்பட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, கொரோனா காலத்தில் நூறு நாட்களுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், 300 நாட்கள் பணிபுரிந்த தங்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கவில்லை எனவும், மற்ற மாநிலங்களைப் போல ஊக்க மதிப்பெண்களும் வழங்கவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, அரசு மருத்துவர்கள் பணிக்கான தேர்வு முடிந்து, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, பணி நியமன உத்தரவுகளை பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.







