7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள அரசுப் பள்ளியில் பயின்ற மாணவருக்கு கல்வி உதவி தொகையாக தனது ஒரு மாத ஊதியம் ரூ. 1.05 லட்சத்தை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்த திருமலைமுருகன்,
காளீஸ்வரி ஆகியோரின் மூத்த மகன் மகாலிங்கம். அங்குள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த இவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த நீட் தேர்வில் 720 க்கு 472 மதிப்பெண்கள் பெற்ற மகாலிங்கம் தமிழக அரசின் 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு தற்போது மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் தனது படிப்பு செலவுக்காக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியனிடம் கடந்த வாரம் உதவி கோரியுள்ளார். கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக உறுதி அளித்தார்.
உறுதி அளித்தபடி இன்று உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகாலிங்கம்
படித்த அரசுப் பள்ளியில், அவருக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், தலைமை
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் தனது 78வது மாத ஊதியம் ரூ. 1.05
லட்சத்தை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் மாணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் வழங்கினார். மாணவரை பாராட்டி பேசி, உதவி வழங்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு மாணவர் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.







